புதிய மின்கம்பம் முறிந்து உச்சியில் இருந்து விழுந்த ஊழியர் பலி


புதிய மின்கம்பம் முறிந்து உச்சியில் இருந்து விழுந்த ஊழியர் பலி
x
தினத்தந்தி 4 Dec 2021 6:48 PM GMT (Updated: 4 Dec 2021 6:48 PM GMT)

சிவகாசி அருகே புதிய மின்கம்பம் முறிந்து அதன் உச்சியில் இருந்து கீேழ விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 மின் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்

சிவகாசி
சிவகாசி அருகே புதிய மின்கம்பம் முறிந்து அதன் உச்சியில் இருந்து கீேழ விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 மின் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
மின் ஊழியர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் துணை மின் நிலையம் சார்பில் அந்த பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 
இந்தநிலையில் நேற்று காலை புதிய கம்பங்களில் உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. 
இதில் மின்வாரிய பணியாளர் சின்னமாரியப்பன் தலைமையில் மின் ஊழியர்கள் காளிராஜ், முருகேசன், முத்தீஸ்வரன், கோபாலகிருஷ்ணன். பிரேம்குமார், ஆனந்தராஜ் ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
முறிந்து விழுந்தது
இந்தநிலையில் ேநற்று மதியம் 12 மணிக்கு காளிராஜூம், முருகேசனும் புதிதாக நடப்பட்ட ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி அதன் உச்சியில் இருந்து, மின்கம்பிகளை இணைக்க வசதியாக இரும்பு உபகரணங்களை பொருத்திக்கொண்டு இருந்தனர். 
மற்ற தொழிலாளர்கள் மின்கம்பத்தின் கீழே நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
அப்போது புதிய மின்கம்பத்தின் அடிப்பகுதி திடீரென முறிந்து விழுந்தது. 
இதில் மின்கம்பத்தின் மீது இருந்த காளிராஜ், முருகேசன் ஆகியோர் கம்பத்தோடு கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த காளிராஜ்(வயது 26) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முருகேசனும்(29), கீழே நின்று கொண்டிருந்த முத்தீஸ்வரனும் (29) படுகாயம் அடைந்தனர்.
விசாரணை
காயம் அடைந்தவர்களை சக பணியாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் விரைந்து சென்று, பலியான காளிராஜ் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
விபத்தில் இறந்த காளிராஜ் சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர். கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர் என கூறுப்படுகிறது. 
சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story