கேரள மாணவியை கடத்தி குமரியில் தங்கியிருந்த வாலிபர் கைது


கேரள மாணவியை கடத்தி குமரியில் தங்கியிருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 9:04 PM GMT (Updated: 4 Dec 2021 9:04 PM GMT)

கேரள மாணவியை கடத்தி குமரியில் தங்கியிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு:
கேரள மாணவியை கடத்தி குமரியில் தங்கியிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
மாணவி
கேரள மாநிலம் கோவளம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் கடந்த மாதம் 12-ந்தேதி அந்த பகுதியில் வசித்து வந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்தி கொண்டு நித்திரவிளை பகுதிக்கு வந்துள்ளார். பின்னர், நித்திரவிளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தனர். 
இந்தநிலையில் வீட்டில் இருந்த மகள் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது, மாயமான மாணவி கடத்தப்பட்டு நித்திரவிளை அருகே உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வாலிபர் கைது
இதைதொடர்ந்து நித்திரவிளைக்கு வந்த கேரள போலீசார், நித்திரவிளை போலீசாரின் உதவியுடன் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த வீட்டுக்குள் அதிரடியாக சென்று ேசாதனை செய்தனர். அப்போது, பிரகாசும், கடத்தப்பட்ட மாணவியும் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை நித்திரவிளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  பின்னர், அவர்களை கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியை மீட்ட கேரள போலீசார், அவரை கடத்தியதற்காக பிரகாசை கைது செய்து அழைத்துச் சென்றனர். 
இந்த சம்பவம் நித்திரவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story