காவேரிப்பாக்கத்தில் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


காவேரிப்பாக்கத்தில் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Dec 2021 6:06 PM GMT (Updated: 5 Dec 2021 6:06 PM GMT)

காவேரிப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர், மனைவி, மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர், மனைவி, மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி பேராசிரியர் 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்னமுதலி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 66). சோளிங்கரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா (57). இவர்களுக்கு விஷ்ணு (29), பரத் (28) என்ற இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் விஷ்ணு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 
இளைய மகன் பரத் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் ராமலிங்கத்தின் தம்பி சிவகுமார், தனது அண்ணனை பார்க்க நேற்று மாலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் படுக்கையறையில் ராமலிங்கம், அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவர் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
கடன்பிரச்சினை காரணமா?

முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ராமலிங்கம் மற்றும் பரத் ஆகிய இருவரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கணவன், மனைவி, மகன் என மூன்று பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story