மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதி கைது


மாணவியை கர்ப்பமாக்கிய  மந்திரவாதி கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 6:33 PM GMT (Updated: 5 Dec 2021 6:33 PM GMT)

குழித்துறை, டிச.6- மார்த்தாண்டம் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 
மந்திரவாதி
மார்த்தாண்டம் பகுதிைய சேர்ந்த ஒரு தொழிலாளி தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இதில், மூத்த மகள் 10-ம் வகுப்பும், 2-வது மகள் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளியின் 2-வது மகளுக்கு உடல்நலக்குறைபாடு இருந்து வந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து உறவினர் ஒருவர் கூறியதன் பேரில், தொழிலாளி தனது 2 மகள்களை அழைத்துக் கொண்டு பேச்சிப்பாறை அருகே உள்ள மணலோடையை சேர்ந்த மந்திரவாதி சேகர் (வயது 47) என்பவரை சந்தித்தார்.
உடனே அவர் பூஜை செய்து எண்ணெய் தடவியதில் 2-வது மகளின் உடல்நலக்குறைபாடு கொஞ்சம், கொஞ்சமாக சரியானது. இதனால், தொழிலாளிக்கு மந்திரவாதி மீது அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டது. 
பரிகார பூஜை
இந்த நிலையில் மந்திரவாதி சேகர், தொழிலாளியிடம் உனது குடும்பத்தில் செய்வினை கோளாறு இருப்பதாக கூறியுள்ளார். எனவே, 2 அல்லது 3 நாட்கள் தனது வீட்டில் தங்கியிருந்து விடிய, விடிய பரிகார பூஜை செய்ய வேண்டும். அதற்கு உன்னுடைய 2 மகள்கள் மட்டும் இங்கு தங்கி இருக்க வேண்டும் என்றார்.
மேலும் என் மீது நம்பிக்கை வைத்து விடலாம் என்று கூறியுள்ளார். அதை நம்பிய தொழிலாளியும் தனது 2 மகள்களையும் மந்திரவாதி சேகரின் வீட்டில் தங்கியிருக்க சம்மதித்தார். அதன்படி பூஜைகள் முடிந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்.
மாணவி கர்ப்பம்
இந்தநிலையில் 10-ம் வகுப்பு மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது மாணவி தன்னுடைய வயிறு வலிப்பதாக தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவர் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தார். 
அப்போது டாக்டர்கள், மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்டு தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார்.
போக்சோ சட்டத்தில் கைது
இதனை அறிந்த சைல்டு லைன் அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பூஜைக்காக தங்கியிருந்த போது 10-ம் வகுப்பு மாணவியை மந்திரவாதி தனியாக அழைத்து சென்று மிரட்டியுள்ளார். எனக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவி பயந்து யாரிடமும் சொல்லாமல் இருந்தது தெரியவந்தது.
பின்னர், இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சேகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மாணவியை மிரட்டி மந்திரவாதி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story