தி.மு.க. மாவட்ட பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து


தி.மு.க. மாவட்ட பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Dec 2021 5:47 PM GMT (Updated: 6 Dec 2021 5:47 PM GMT)

விக்கிரவாண்டி அருகே தி.மு.க. மாவட்ட பெண் கவுன்சிலரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி.. இவரது மனைவி மீனா (வயது 50). மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த கோபிநாத் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மீனா தனது வீட்டில் இருந்தார். 
அப்போது அங்கு  வந்த கோபிநாத் மீனாவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை திட்டி கத்தியால் முகத்தில் குத்தினார். இதில் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு வந்த அவரது உறவினரான குப்பு என்பவர் கோபிநாத்திடம் தட்டிக்கேட்டார். 

வலைவீச்சு

இதில் ஆத்திரமடைந்த அவர் குப்புவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மீனா சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து  மீனா அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து  கோபிநாத்தை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story