மழை வெள்ளத்தில் தத்தளித்த மணப்பாறை


மழை வெள்ளத்தில் தத்தளித்த மணப்பாறை
x

மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 27.46 சென்டி மீட்டர் மழை பெய்ததால் குளம் உடைந்தது. தரைப்பாலங்களும் மூழ்கின. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

மணப்பாறை, டிச.7-
மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 27.46 சென்டி மீட்டர் மழை பெய்ததால் குளம் உடைந்தது. தரைப்பாலங்களும் மூழ்கின. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மணப்பாறையில் மழை
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை 27.46 சென்டி மீட்டர் பெய்தது. இதனால் மணப்பாறையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்பு அய்யர்குளம் உடைப்பு
 மணப்பாறை  ராஜிவ் நகரில் உள்ள அப்புஅய்யர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதே போல் கரிக்கான்குளம் பகுதியில் குளத்து நீரை ஓரமாக வெட்டி விட்டதால் அந்த நீரும் ஆர்ப்பரித்து வெளியேறியது. இதனால் மணப்பாறை பஸ் நிலையம் முன்பு சுமார் 3 அடி உயரம் வரை தண்ணீர் ஓடியது. கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
இதேபோல் மணப்பாறை இந்திரா நகர், மஸ்தான் தெரு, சேதுரெத்தினபுரம், போலீஸ் லைன், முத்தன் தெரு, கடைவீதி, ராஜிவ் நகர், கரிக்கான்குளம் பகுதி, அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை நீர் சூழ்ந்தது.
 சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கலெக்டர்-அதிகாரிகள் ஆய்வு
தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சுஜாதா மற்றும் மணப்பாறை தாசில்தார் சேக்கிழாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மணப்பாறை விரைந்து வந்தனர். அப்பகுதிகளில் ஆய்வு செய்து தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகளை முடுக்கி விட்டனர்.
சாலை மறியல்
அண்ணா நகர் பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் இல்லாததால் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணா நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்கள் மணப்பாறை-விராலிமலை சாலையில் எம்.ஜி.ஆர். நகர் அருகே மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மழைநீர் செல்வதற்கான பணிகளை மேற்கொண்டதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 இதே போல் பஸ் நிலையம் அருகே தேங்கிய நீர் கடைகளுக்குள் வருகின்றது என்றும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி வியாபாரிகள் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்கள் நகரில் வராததால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தரைப்பாலம் மூழ்கியது
இதேபோல் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள இரண்டு தரைப்பாலங்கள் மூழ்கி நீர் முழுவதுமாக வெளியேறியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. மக்கள் வெளியேறமுடியாத நிலையும் ஏற்பட்டது. இதே போல் சமுத்திரத்திலும் தரைப்பாலத்தை கடந்து நீர் ஆர்ப்பரித்துச் சென்றதால் மக்கள் அந்த சாலையை பயன்படுத்தவில்லை. இதே போல் கே.உடையாபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
ஆற்றில் அதிகரித்து செல்லும் நீர்
மணப்பாறை குளம் ஏற்கனவே நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தற்போது பெய்த மழையால் மேலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுமட்டுமின்றி அப்பு அய்யர் குளம், கரிக்கான்பட்டி, மரவனூர் குளம், சமுத்திரம் குளம் என அனைத்து குளங்களும் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் மாமுண்டி ஆற்றில் செல்வதால் நீர்வரத்து ஆற்றில் அதிக அளவு உள்ளது.

Related Tags :
Next Story