பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு


பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 7 Dec 2021 6:13 PM GMT (Updated: 7 Dec 2021 6:13 PM GMT)

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்ததால் அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.

தோகைமலை, 
காதல் திருமணம்
தோகைமலை அருகிலுள்ள கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 28). இவரது மனைவி வீரமணி (27). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் வீரமணியின் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக 2-வது பிரசவத்தின்போது வீரமணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி சாவு
தற்போது 3-வது முறையாக வீரமணி கருவுற்றிருந்தார். இதையடுத்து, கடந்த 5-ந் தேதி பஞ்சப்பட்டி அரசு சுகாதார நிலையத்தில் வீரமணி பிரசவத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தையின் எடை அதிகமாக உள்ளது. எனவே மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதன்பேரில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரமணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு வீரமணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சையும் அளித்தாக தெரிய வருகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீரமணி பரிதாபமாக இறந்தார்.
இந்தசம்பவம் குறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story