தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Dec 2021 7:12 PM GMT (Updated: 8 Dec 2021 7:12 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

சுவிட்ச் பெட்டி சீரமைப்பு
நாகர்கோவில் தொல்லவிளையில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கின் சுவிட்ச் மற்றும் மீட்டர் அடங்கிய பெட்டி மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுவிட்சு மற்று மீட்டர் அடங்கிய புதிய பெட்டியை உயரமான இடத்தில் அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
வடிகால் வசதி தேவை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராணித்தோட்டம் தடி டிப்போ ரோட்டில் 10-வது குறுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைநீர் தேங்கி வடியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                           -எஸ்.பிரகாஷ், ராணித்தோட்டம். 
சுகாதார சீர்கேடு
திருவிதாங்கோடு கிராம நிர்வாக அலுவலகம் அருகில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தின் 10-வது சிவாலயமான மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் நலன்கருதி கோவில் முன் பகுதியில் கழிவு நீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                  -ராஜகோபால், திருவிதாங்கோடு.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்ேகாவில், வடசேரி ஆராட்டு ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். சாலை சேதமடைந்து உள்ளதால் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                                                                         -சுரேஷ், வடசேரி.
பொதுமக்கள் அவதி
தாழக்குடியில் இருந்து சந்தைவிளை செல்லும் மெயின்ரோட்டில் ஆற்றுபாலம் உள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணி கடந்த 2 ஆண்டுகளுளாக நடந்து வருகிறது. மந்தமாக நடைபெற்று வரும் பாலம் பணியால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 
                                                                  -காளியப்பன்,இறச்சகுளம்
கழிவுநீர் குழாயில் அடைப்பு
நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் வடக்கு தெருவில் பதிக்கப்பட்டுள்ள  கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் தெருவில் பாய்வதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                                        -ஹரிஹரன், ஊட்டுவாழ்மடம்.
காட்சி பொருளான கலையரங்கம்
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட வேம்பத்தூர் காலனியில்  அங்கன்வாடி அருகில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு கலையங்கம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்த கலையரங்கம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. எனவே, இந்த கலையரங்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                    -ஜெகன், வேம்பத்தூர் காலனி.


Next Story