தி.மு.க. பிரமுகரை ஆள்வைத்து கொன்ற மகள் கைது


தி.மு.க. பிரமுகரை ஆள்வைத்து கொன்ற மகள் கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 7:38 PM GMT (Updated: 8 Dec 2021 7:38 PM GMT)

தி.மு.க. பிரமுகர் மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகள் ஆள் வைத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார். ரூ.60 ஆயிரம் கூலி பேசி தீர்த்து கட்டியது அம்பலமானது.

குளச்சல்:
தி.மு.க. பிரமுகர் மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகள் ஆள் வைத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார். ரூ.60 ஆயிரம் கூலி பேசி தீர்த்து கட்டியது அம்பலமானது.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- 
தி.மு.க. பிரமுகர் கொலை
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வந்தவர் குமார் சங்கர் (வயது 52), வயரிங் மற்றும் பிளம்பர் வேலைக்கு சென்று வந்தார். மேலும் இவர் ரீத்தாபுரம் பேரூராட்சி 15-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு ரெத்னாவதி (46) என்ற மனைவியும், தீபாவதி (26), சோனியாவதி (23) என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் தீபாவதி கல்லூரியில் எம்.எட். படித்து வருகிறார்.
கடந்த 6-ந் தேதி இரவு குமார் சங்கர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து, குமார் சங்கரை வெளியே அழைத்து சென்றார். வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற போது மர்மநபருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமார் சங்கரை அந்த ஆசாமி சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த குமார் சங்கர் துடிதுடித்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் சிக்கியது.
அதைத்தொடர்ந்து இந்த கொலையில் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
திட்டம் தீட்டிய மகள்
அப்போது திடீர் திருப்பமாக குமார் சங்கர் கொலையில் அவருடைய மகள் தீபாவதி மற்றும் மூவர்புரத்தை சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 
அதன்பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
திக்கணங்கோட்டில் உள்ள தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் படிக்க சென்றபோது தீபாவதிக்கும் மூவர்புரத்தை சேர்ந்த நர்சிங் மாணவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு நாள் தீபாவதி, தன் தந்தை தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தங்களை அடித்து கொடுமை படுத்துகிறார் என்று அவரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது அவருக்கு, மாணவர் ஆறுதல் கூறியுள்ளார். இந்த நிலையில் தன் தந்தையை தீர்த்து கட்ட தீபாவதி முடிவு செய்து, தனது எண்ணத்தை மாணவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். 
அப்போது கீழ திக்கணங்கோடு இல்ல விளாகத்தை சேர்ந்த ஸ்ரீமுகுந்தன் (21)என்பவரை அழைத்து அவர் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றலாம் என்று மாணவர் கூறியுள்ளார்.
ரூ.60 ஆயிரம் கூலி பேசி...
அதன்படி மாணவர், ஸ்ரீமுகுந்தனை சந்தித்து, தனது தோழியின் தந்தையை கொலை செய்ய கூலியாக ரூ.60 ஆயிரம் பேசியுள்ளார். மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரத்தையும் ஸ்ரீமுகுந்தனிடம் கொடுத்துள்ளனர்.
இவர்களின் திட்டப்படி குமார் சங்கரை வீட்டில் இருந்து ஸ்ரீமுகுந்தன் அழைத்து சென்று தீர்த்து கட்டிவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
3 பேர் கைது
அதைத்தொடர்ந்து தீபாவதி, மாணவர் ஆகியோரை போலீசார்அதிரடியாக கைது செய்தனர். அதே சமயம் கொலை செய்து விட்டு உவரியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீமுகுந்தனையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். 
இந்த வழக்கில் கைதான ஸ்ரீமுகுந்தனுக்கு கூலிப்படையுடன் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தி.மு.க. பிரமுகரை ஆள் வைத்து மகள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story