அண்ணன் கம்பால் அடித்துக்கொலை; தம்பி கைது


அண்ணன் கம்பால் அடித்துக்கொலை; தம்பி கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 8:03 PM GMT (Updated: 8 Dec 2021 8:03 PM GMT)

அண்ணனை கம்பால் அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிந்தாமணி பேரிபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முத்தமிழ்செல்வன் (வயது 31). இவருடைய தம்பி வேல்முருகன் (29).
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகள் முத்தமிழ்செல்வியை காதலித்து திருமணம் செய்தார். அதன்பின்னர் முத்தமிழ்செல்வி தூக்குப்போட்டு இறந்து விட்டார். 

இதையடுத்து முத்தமிழ் செல்வனுக்கு யாரும் பெண் கொடுக்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேல்முருகன் தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்தி விட்டு கேரளா சென்றுவிட்டார். அந்த ஆட்டோவை முத்தமிழ்செல்வன் ஓட்டி வந்தார்.
ஊருக்கு வந்திருந்த வேல்முருகன் இதனைக் கண்டு ஆத்திரமடைந்து அண்ணன் முத்தமிழ்செல்வனை கம்பால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த முத்தமிழ்செல்வன் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சீமைராஜா வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story