பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது


பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 9 Dec 2021 7:54 PM GMT (Updated: 9 Dec 2021 7:54 PM GMT)

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அங்கு நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ யாரோ மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதேபோல் அம்பையை சேர்ந்த மகேஸ்வரி என்பவரிடம் ரூ.9 ஆயிரம், பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரை சேர்ந்த செல்வி என்பவரிடம் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

இதுகுறித்து 3 பேரும் மேலப்பாளையம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறினார். உடனே போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுரை பரசுராம் பட்டியை சேர்ந்த ராஜன் மனைவி அன்புச்செல்வி (வயது 54) என்பதும், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 3 பேரிடமும் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்

Next Story