இலுப்பூர் அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


இலுப்பூர் அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை  சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Dec 2021 6:34 PM GMT (Updated: 11 Dec 2021 6:34 PM GMT)

இலுப்பூர் அருகே திருமணமான 3 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். மேலும் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்:
புதுப்பெண் தற்கொலை
விராலிமலை அருகே கல்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கோபிநாத் (வயது 26). இலுப்பூர் போலீஸ் சரகம் மலைக்குடிப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி மகள் போதும்பொண்ணு என்கிற ரஞ்சிதா (19). இருவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கல்குடியில் வசித்து வந்த கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த போதும் பொண்ணு நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
இதைப்பார்த்த கோபிநாத், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து அவரது உடலை தனியார் ஆம்புலன்சில் மலைக்குடிப்பட்டியில் உள்ள ரஞ்சிதாவின் தாய் வீட்டிற்கு அனுப்பியதாக தெரிகிறது. 
சாலை மறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதாவின் உறவினர்கள் விராலிமலை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ரஞ்சிதாவின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ரஞ்சிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த உறவினர்கள் அவரது உடலை உரிய விசாரணைக்கு பின்னரே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பரபரப்பு 
இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு, இலுப்பூர் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. ரஞ்சிதா இறந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இலுப்பூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்று மாதத்திலேயே புதுப்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் இலுப்பூர் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story