ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடைகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரம் முன் படுத்து வியாபாரிகள் மறியல்


ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடைகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரம் முன் படுத்து வியாபாரிகள் மறியல்
x
தினத்தந்தி 17 Dec 2021 11:47 PM GMT (Updated: 17 Dec 2021 11:47 PM GMT)

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடைகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரம் முன் படுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் வியாபாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே சாலையோர வியாபாரிகள் காய்கறி, பழம், காலணிகள் போன்ற 98 சிறு கடைகளை 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். விம்கோ நகர் ெரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ெரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த பகுதியில் உள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான நோட்டீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று ெரயில்வே துறையினரும், ஆர்.டி.ஓ. கண்ணப்பன் தலைமையில் வருவாய்த்துறையினரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளை இடிக்க அங்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் பொது வர்த்தக சங்க தலைவர் ராமசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொக்லைன் எந்திரம் முன் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மயங்கியதால் பரபரப்பு

பல ஆண்டுகளாக சாலையோரம் வியாபாரம் செய்து வரும் எங்களை அப்புறப்படுத்தினால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும் என்றும், அதுவரை கடைகளை இடிக்க விடமாட்டோம் என்றும் வியாபாரிகள் கூறினர்.

அப்போது பானுமதி என்ற பெண் வியாபாரி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செய்வதறியாது திகைத்த அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்துச்சென்று மாற்று இடம் வழங்குவதற்கான இடங்களை காண்பித்தனர்.

ஆனால் அவர்கள், தங்களுக்கு அதே பகுதியில் மார்க்கெட் அருகே உள்ள காலி இடத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடைகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

Next Story