ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு


ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:17 PM GMT (Updated: 20 Dec 2021 9:17 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, அரசு ஆதி திராவிடர் நல மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதியினை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று ஆய்வு செய்தார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, அரசு ஆதி திராவிடர் நல மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதியினை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு
தென்காசி மாவட்ட அரசு ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியில் சேதமடைந்த கட்டிடம், மேலகரம் அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி, சங்கரன்கோவில் ஆவுடைபொய்கை தெப்பம் அருகில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதி, கடையநல்லூர் வலசையில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி விடுதி மற்றும் குற்றாலம் கல்லூரி மாணவியர் விடுதி ஆகியவற்றை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, விடுதியில் அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு தரமான உணவு தயாரித்து வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்க தயார் நிலையில் இருந்த உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தினை உறுதி செய்தார். மேலும், விடுதியில் பல்வேறு தேவையான வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள். பழனி நாடார், சதன் திருமலைக்குமார், ராஜா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, தாசில்தார் ஹென்றி பீட்டர், தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், தென்காசி திமுக நகர செயலாளர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனு
தென்காசிக்கு வந்திருந்த அமைச்சரை, கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி சீனிதுரை சந்தித்து, பஞ்சாயத்து யூனியனில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை கொடுத்தார்.


Next Story