சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கு:கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?நீதிபதி கேள்வி


சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கு:கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?நீதிபதி கேள்வி
x
தினத்தந்தி 21 Dec 2021 7:46 PM GMT (Updated: 21 Dec 2021 7:46 PM GMT)

“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என்று சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யும் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை, 

திருச்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், யூடியூப்பில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு வீடியோ வெளியிட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. அவதூறு நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர் கோர்ட்டு விதித்த நிபந்தனையை மீறியதாகவும், எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் வெளியிட்ட வீடியோ, ஆடியோ ஆதாரங்களில் உள்ளவற்றை அரசு தரப்பினர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தியிடம் மீண்டும் நேற்று வந்தது.
அப்போது போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீன் பெற்ற வழக்குகளில் கோர்ட்டில் அளித்த வாக்குறுதியை மீறி அவதூறு கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார், என்று தெரிவித்தார். பின்னர் இதுதொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதைப்பார்த்த நீதிபதி, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இதுபோன்ற அவதூறான பேச்சுகளை ஊக்கப்படுத்த முடியாது என்றார்.
விசாரணை முடிவில், இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story