சிவகாசி, வத்திராயிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


சிவகாசி, வத்திராயிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2021 6:39 PM GMT (Updated: 22 Dec 2021 6:39 PM GMT)

சிவகாசி, வத்திராயிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

சிவகாசி
சிவகாசி, வத்திராயிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு
சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் நேற்று வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, சிவகாசி மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழு சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை எந்திரம் மூலம் தாசில்தார் ராஜ்குமார் முன்னிலையில் அகற்றினர். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
இதேபோல் சிவகாசி மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கையால் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் தற்போது விரிவடைந்து காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு
மேலும் வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட மூவரைவென்றான் ஊராட்சி சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து மாட்டு கொட்டகை அமைத்திருந்தார். இதனை அறிந்த மூவரைவென்றான் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கண்ணன் அரசுக்கு பலமுறை தகவல் தெரிவித்து அந்த இடத்தில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்துள்ளார். இந்தநிலையில் வத்திராயிருப்பு தாசில்தார் மாதா மற்றும் வருவாய்த்துறையினர், நத்தம்பட்டி போலீசார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டுக் கொட்டகையை அகற்றினர்.

Next Story