ரெயில்முன் பாய்ந்து மாணவர் பலியான விவகாரம்: தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு கல்லூரி மாணவர் கைது


ரெயில்முன் பாய்ந்து மாணவர் பலியான விவகாரம்: தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2022 12:07 AM GMT (Updated: 1 Jan 2022 12:07 AM GMT)

ரெயில்முன் பாய்ந்து மாணவர் பலியான விவகாரம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை, செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 20). இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அன்று கல்லூரிக்கு சென்று விட்டு மாலை புறநகர் ரெயிலில் சக நண்பர்களுடன் வந்தார்.

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது சென்னையை சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவர்கள் அவரை பார்த்து கேலி, கிண்டல் செய்து உயிர் பிச்சை போடுகிறோம் தப்பித்து ஓடிவிடு என கூறி மிரட்டி அனுப்பினார்கள்.

இந்தநிலையில் மற்றொரு கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையில் வாழ விரும்பவில்லை என நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பி விட்டு அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து குமார் தற்கொலை செய்து கொண்டார்.

கைது

தற்கொலை செய்துகொண்ட குமாரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடு க்கக்கோரி சக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ராஜாங்குப்பத்தை சேர்ந்த மனோஜ் (19) என்பவரை போலீசார் கைது செய்து,திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 7 கல்லூரி மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story