806 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு


806 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jan 2022 5:23 PM GMT (Updated: 2 Jan 2022 5:23 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 806 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

கடலூர், 

கொரோனா தடுப்பூசி

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 806 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதை கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் வன்னியர் திருமண மண்டபம் மற்றும் வண்டிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி நோய் தொற்றில் இருந்து முற்றிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று நடந்த முகாமில் மொத்தம் 80 ஆயிரத்து 787 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டது.
ஆய்வின்போது துணை இயக்குனர் (சுகாதாரம்) மீரா, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், சுகாதார அலுவலர் அரவிந்த்ஜோதி, தடுப்பூசி களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story