ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் மர்ம சாவு


ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் மர்ம சாவு
x
தினத்தந்தி 2 Jan 2022 8:19 PM GMT (Updated: 2 Jan 2022 8:19 PM GMT)

ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் மர்ம முறையில் இறந்தார்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் வடக்கு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொடியரசு(வயது 45). இவர் ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி கட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கே வந்த அவரது இளைய மகன் துரைபாண்டியன்(22), உறவினர் ராஜதுரை ஆகியோருக்கும், கொடியரசுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், கொடியரசு தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கொடியரசு தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடியரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். ஆனால் உறவினர்கள் உடலை கொடுக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கொடியரசுவின் மூத்த மகன் குணசேகர் கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடியரசு அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story