பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி


பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி
x
தினத்தந்தி 2 Jan 2022 10:22 PM GMT (Updated: 2 Jan 2022 10:22 PM GMT)

பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனம் மோதி சிறுத்தை குட்டி இறந்தது.

சத்தியமங்கலம்
பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனம் மோதி சிறுத்தை குட்டி இறந்தது. 
புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய ெநடுஞ்சாலை செல்கிறது. 
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது இந்த தேசிய நெடுஞ்சாலையை கடப்பது வழக்கம். 
சாவு
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை குட்டி ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த சிறுத்தை குட்டி அங்குள்ள பண்ணாரி சோதனை சாவடியை அடுத்த விநாயகர் கோவில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. 
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, சிறுத்தை குட்டி மீது மோதியது. இதில் சிறுத்தை குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தது. 
பிரேத பரிசோதனை
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் வனச்சரகர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தை குட்டியை பார்வையிட்டார். பின்னர் சிறுத்தை குட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கராச்சிக்கொரையில் உள்ள வனவிலங்குகள் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இறந்தது 1 வயது பெண் சிறுத்தை குட்டி ஆகும்,’ என்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Next Story