சென்னை விமான நிலையத்தில் ரூ.34½ லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.34½ லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:10 AM GMT (Updated: 8 Jan 2022 8:10 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாய் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 2 விமானங்கள் வந்தன. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் மடிக்கணினியில் தங்க தகடு, தங்க சங்கிலியை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.28 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 635 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் அவர்களது உடைமைகளில் மறைத்து வைத்து இருந்த ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புடைய தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story