தியாகதுருகம் அருகே பரபரப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகை


தியாகதுருகம் அருகே பரபரப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Jan 2022 5:15 PM GMT (Updated: 8 Jan 2022 5:15 PM GMT)

தியாதுருகம் அருகே மண்எண்ணெயை முறையாக வழங்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து ரேஷன் கடையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கண்டாச்சிமங்கலம்

பகுதிநேர ரேஷன்கடை

தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பழைய உச்சிமேடு கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள பகுதி நேர ரேஷன் கடையின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடை விற்பனையாளர் அம்பிகா புது உச்சிமேடு ரேஷன் கடையில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பை மினி லாரியில் எடுத்து வந்தார். இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் திடீரென ரேஷன் கடையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்எண்ணெய் வழங்கவில்லை

இதுபற்றி அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் முறையாக வழங்கவில்லை என தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த நவம்பர் மாதம் புகார் தெரிவித்தோம். இதையடுத்து மாதந்தோறும் மண்எண்ணெய் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக மண்எண்ணெயை முறையாக வழங்கவில்லை. மண்எண்ணெயை முறையாக வழங்கினால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவோம் என்றனர். 

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தாசில்தார் வெங்கடேசன், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் மண்எண்ணெய் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததோடு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். 
இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story