2 வீடுகளின் தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகை திருட்டு


2 வீடுகளின் தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2022 7:32 PM GMT (Updated: 8 Jan 2022 7:32 PM GMT)

2 வீடுகளின் தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:

கதவு திறந்து கிடந்தது
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அய்யலூர் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரசு பஸ் டிரைவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா (வயது 55). இவர்களுக்கு ரம்யா, சரண்யா, நித்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் மல்லிகா தனது 3 மகள்களுடன் வசித்து வருகிறார். 
மேலும் இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி மல்லிகா மகள்களுடன் தூங்குவதற்காக அருகே உள்ள தனது அண்ணன் ராமலிங்கம் வீட்டிற்கு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு மகள்களுடன் அண்ணன் வீட்டிற்கு தூங்க சென்றார். இதைத்தாடர்ந்து நேற்று காலை மல்லிகா தனது மூத்த மகள் ரம்யாவுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அறையின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
நகை- பணம் திருட்டு
மேலும் அறையில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி, ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. வீட்டில் இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மல்லிகா பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பெரம்பலூர்- துறையூர் ரோடு கல்யாண் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன்(52). கட்டுமான தொழில் செய்து வரும் இவர், தனது சொந்த ஊரான குரும்பலூரில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது கடந்த 2 மாதங்களாக தமிழ்மாறன் தனது குடும்பத்தினருடன் இரவில் குரும்பலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தமிழ்மாறன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குரும்பலூருக்கு சென்று விட்டார். 
நேற்று காலை தமிழ்மாறனின் மகன் நவீன் தனது மடிக்கணினியை எடுப்பதற்காக கல்யாண் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நவீன் தனது தாய் ஜெயசித்ராவை அழைத்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 2 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு அரைஞாண் கொடி மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியும் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story