புதர்மண்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்


புதர்மண்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
x
தினத்தந்தி 12 Jan 2022 3:34 PM GMT (Updated: 12 Jan 2022 3:34 PM GMT)

உப்புக்கோட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையம் புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள் புகுந்து விடுகின்றன. இதனால் கர்ப்பிணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தேனி:

உப்புக்கோட்டை அருகே போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டொம்புச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு 15 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணிகளுக்கான பிரசவ வார்டு உள்ளது. சுகாதார நிலையத்தில் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பத்ரகாளிபுரம் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

இந்த சுகாதார நிலையத்தை சுற்றி செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பிரசவ வார்டு பகுதியில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் படையெடுக்கின்றன. இரவு நேரங்களில் கர்ப்பிணிகள் தங்கி சிகிச்சை பெற அச்சப்பட்டு வருகின்றனர். 

டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் மகப்பேறு சிகிச்சைக்காக 2 முறை மாநில அரசின் சிறந்த விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது புதர்மண்டி காணப்படுகிறது. புதர் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story