பொங்கல் பண்டிகையையொட்டி கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரம்


பொங்கல் பண்டிகையையொட்டி கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரம்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:01 PM GMT (Updated: 12 Jan 2022 5:01 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு ஜோடி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடலூர், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த பன்னீர் கரும்புகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

கடலூர் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகரை சுற்றியுள்ள கிராமங்களில் சாகுபடி செய்த விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை மொத்தமாக வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

ரூ.80-க்கு விற்பனை

நேற்று ஒரு ஜோடி கரும்பு சிறியது ரூ.30, ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக ரூ.80-க்கு விற்பனை செய்யப் பட்டது. ஆனால் உழவர் சந்தையில் ஜோடி கரும்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ. 250 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் மஞ்சள் கொத்து சிறியது ரூ.25-க்கும், பெரியது ரூ.30-க்கும் விற்பனையானது. வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு என பழ வகைகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் ராமாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Next Story