தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது


தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது
x
தினத்தந்தி 12 Jan 2022 5:37 PM GMT (Updated: 12 Jan 2022 5:37 PM GMT)

தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

கோவை

தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

எல்.முருகன் பேட்டி

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிலையில் திருப்பூர் மருத்துவ கல்லூரியை தொடங்கி வைக்க மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர் அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ரூ.4080 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1,450 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்திருக்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வானொலி நிலையங்கள் மூடப்படாது

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் திருக்குறளை பிரதமர் முன்னிலைப்படுத்தி வருகின்றார். இதனால் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது. அங்கு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தும் பணிகள் மட்டுமே நடக்கின்றன. தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப்-1 அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளும் நடைபெறுகிறது. அதற்கான முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது‌. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story