தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்-அரசு நிகழ்ச்சிகளுக்கு முறையான அழைப்பு இல்லை என புகார்


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்-அரசு நிகழ்ச்சிகளுக்கு முறையான அழைப்பு இல்லை என புகார்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:42 PM GMT (Updated: 12 Jan 2022 5:42 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு நிகழ்ச்சிகளுக்கு முறையான அழைப்பு இல்லை என்று அவர் புகார் தெரிவித்தார்.

தர்மபுரி:
எம்.எல்.ஏ. தர்ணா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி நேற்று மதியம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு நிகழ்ச்சிகளுக்கு முறையான அழைப்பு இல்லை என்று புகார் தெரிவித்தும், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் அவர் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் எந்த அரசின் நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான அழைப்பு விடுப்பது இல்லை. குறிப்பாக கடத்தூர் பேரூராட்சியில் சாலை பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ. ஆன எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எம்.பி.யை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 
போராட்டத்தை கைவிட மறுப்பு
மத்திய அரசு திட்டம் என்றால் அவரை வைத்து நிகழ்ச்சி நடத்தட்டும், மாநில அரசின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு எம்.எல்.ஏ.வை அழைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தெரிவித்தேன். அப்படி ஏதும் நிகழ்ச்சி நடக்காது என்று சொல்லிவிட்டு எம்.பி.யை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் தான் தர்ணா போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர் போராட்டத்தை கைவிட மறுத்தார்.
முன்னாள் அமைச்சர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். நடந்த சம்பவங்கள் பற்றி கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ.விடம் கேட்டறிந்தார். 
இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் புகார் தெரிவிப்போம் என்று கே.பி.அன்பழகன் கூறினார். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story