தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ.2.12 கோடியில் திட்டப்பணிகள்-தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு


தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ.2.12 கோடியில் திட்டப்பணிகள்-தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 5:42 PM GMT (Updated: 12 Jan 2022 5:42 PM GMT)

தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனரக தலைமை பொறியாளர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி:
திட்டப்பணிகள்
தர்மபுரி நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி நகராட்சி 10-வது வார்டு டி.என்.வி. நகர் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகளில் புதிய தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி ரூ.1 கோடியே 26 லட்சத்து 60 மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோன்று நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு அன்னசாகரம் பகுதியிலுள்ள தண்டு பாதை தெருவில் புதிய தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனரக தலைமை பொறியாளர் என்‌.நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரமான சாலை
அவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சாலையை தரமானதாக அமைக்கவும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், பொறியாளர் ஆர்.ஜெயசீலன், இளநிலை பொறியாளர் டி.சரவண பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story