கஞ்சா குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்


கஞ்சா குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்
x
தினத்தந்தி 12 Jan 2022 8:40 PM GMT (Updated: 12 Jan 2022 8:40 PM GMT)

கஞ்சா குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தஞ்சை சரக முதல் பெண் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற கயல்விழி கூறினார்.

தஞ்சாவூர்;
கஞ்சா குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தஞ்சை சரக முதல் பெண் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற கயல்விழி கூறினார்.
புதிய டி.ஐ.ஜி.
தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த பிரவேஷ்குமார் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த கயல்விழி தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று கயல்விழி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை சரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகள் மீதும், சமூக விரோத குற்ற செயல்களான கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிர நடவடிக்கை
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது கொரோனா பரவல் காலமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி அரசின் விதிமுறைகளை பின்பற்றி போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கயல்விழி ஏற்கனவே திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது பதவி உயர்வு பெற்று திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு சென்ற அவர், தற்போது தஞ்சை சரக முதல் பெண் டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தஞ்சை மாவட்ட முதல் பெண் போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா பொறுப்பு ஏற்று இருந்தார்.

Next Story