கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 31-ந் தேதி வரை மூடல்


கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 31-ந் தேதி வரை மூடல்
x
தினத்தந்தி 12 Jan 2022 9:17 PM GMT (Updated: 12 Jan 2022 9:17 PM GMT)

கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுவதாக மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்து உள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுவதாக மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்து உள்ளார்.  

தொடர்ந்து நடத்தப்படும்

 பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், கல்வித்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளி கல்வித்துறை கமிஷனர் விஷால், பி.யூ.கல்லூரி கல்வி இயக்குனர் ஸ்னேகல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே வருகிற 19-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் வைரஸ் பரவல் மிக அதிகமாக உள்ளது. அதனால் விடுமுறையை நீட்டித்து இந்த வகுப்புகளை வருகிற 31-ந் தேதி வரை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்.

கலெக்டர்கள் முடிவு

அங்கு வகுப்புகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவவில்லை. மாநிலத்தின் பிற பகுதிகளில் தாலுகாக்களில் கொரோனா பாதிப்பு 5 சதவீதத்தை தாண்டினால், அதுகுறித்து ஆலோசித்து அந்த தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை விடுவது குறித்து கலெக்டர்கள் முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை மிக மோசமான நிலைக்கு சென்றால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். பெங்களூரு, மைசூரு, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் சில தாலுகாக்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூருவில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை. கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக பின்பற்றி வகுப்புகளை நடத்துவோம்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

கலெக்டர்கள், தாசில்தார்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். 

கொரோனா பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளேன். குழந்தைகளின் விவரங்களை சேகரிக்குமாறும் கூறியுள்ளேன்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Next Story