தோட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


தோட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2022 5:38 PM GMT (Updated: 8 Feb 2022 5:38 PM GMT)

எட்டயபுரம் அருகேதோட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே நிலப்பிரச்சினையால் விரக்தி அடைந்த விவசாயி தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதுரகிரி (வயது 59). இவர் அப்பகுதியில் உள்ள தன்னுடைய 1½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
சதுரகிரி நிலத்தை சுற்றி உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்தினர் பட்டாசு ஆலை கட்டுவதற்காக வாங்கி உள்ளனர். இந்த நிலத்தை சுற்றி ஆலை நிர்வாகத்தினர் தங்களது நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்
இதில் தனது நிலத்தை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாக சதுரகிரி கருதினார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் சதுரகிரி தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் நிலத்தை சர்வேயர் மூலம் அளந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
விஷம் குடித்து சாவு
இந்த நிலையில் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பார்கள் என்று நினைத்த சதுரகிரி நேற்று காலையில் தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். நிலப்பிரச்சினையில் விரக்தியில் இருந்த அவர் அங்கு வைத்து திடீரென பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, தோட்டத்திற்கு வந்தனர். சதுரகிரியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.     மேலும்,  இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சதுரகிரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எட்டயபுரம் அருகே நிலப்பிரச்சினையால் விரக்தி அடைந்த விவசாயி தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story