இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை அறிவிப்பு சுவரொட்டி


இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை அறிவிப்பு சுவரொட்டி
x
தினத்தந்தி 11 March 2022 7:50 PM GMT (Updated: 11 March 2022 7:59 PM GMT)

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

கரூர், 
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை, விசைத்தறி, பஸ் கூண்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில், கரூர் திருமாநிலையூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் முதலில் ஆங்கிலத்தில் ‘வாண்டட்’ என்றும், அதனை தொடர்ந்து இந்தி, வங்க மொழியிலும், 4-வதாக தமிழில் ‘வேலைக்கு ஆட்கள் தேவை' என அச்சிட்டுள்ளனர்.
மேலும், தமிழில் தறி ஓட்டுனர், தறி மெக்கானிக், சூப்பர்வைசர், பாவு ஓட்டுபவர் தேவை. முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவமில்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும் என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது. தமிழில் கூறியுள்ள வார்த்தைகள் இந்தி மொழியிலும் அச்சிட்டு, அதன் கீழே ஆங்கிலத்திலும் அச்சிட்டுள்ளனர். கரூரில் வடமாநிலங்களை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகின்றனர். அதனால் அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை என்றும் பிற விவரங்களை தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்து உள்ளது.

Next Story