மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும்


மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 March 2022 12:34 PM GMT (Updated: 14 March 2022 12:34 PM GMT)

மேகதாதுவில் அணை கட்டவிடாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

மலைக்கோட்டை, மார்ச்.15-
மேகதாதுவில் அணை கட்டவிடாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு  தெரிவித்து  திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் மக்களின் பிரச்சினைகள் காற்றில் பறக்கவிடப்படும். தமிழ்நாட்டு விவசாயிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து  வஞ்சிக்கிறது. 85 சதவீத மக்களின் வாழ்க்கையை பூர்த்தி செய்வது காவிரி ஆறு தான். தமிழ்நாட்டு பிரச்சினையில் எப்போதும் தி.மு.க. கோட்டை விட்டு விடும்.
மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தடுக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா அரசு அணை கட்டும் பிரச்சினைக்கு பதிலாக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் கவனம் செலுத்துங்கள். தற்போது நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. அதை அதிகப்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். காடு வளர்ப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
அணை கட்டவிடாமல்...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து விடாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும். தி.மு.க.விற்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அப்பாவியாக வாக்களித்து விட்டார்கள். இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 மாத ஆட்சியில் மக்களுக்கு விடியல் ஏற்படவில்லை. தி.மு.க. மேகதாதுவில் அணை கட்ட விடாமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் தான். எங்களின் இயக்கமே போராட்டத்தில் தொடங்கி போராட்டத்தில் பயணிக்கிற இயக்கம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர எங்கள் இயக்கம் தொடங்கி உள்ளோம். இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம். மக்கள் பிரச்சினைக்காக போராடுவோம். ஜனநாயகப் போராளி நாங்கள் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோஷம் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களின் சார்பில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அ.ம.மு.க. மாநில பொருளாளரும், மாவட்ட செயலாளருமான மனோகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், கலைச்செல்வன், கவுன்சிலர் செந்தில்நாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் போக்கை மத்திய, மாநில அரசுகள் முழுவதுமாக தடுக்க வேண்டும். மேகதாதுவில் அணைகட்டுவதை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story