மரத்தில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு


மரத்தில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 6 April 2022 8:27 PM GMT (Updated: 6 April 2022 8:27 PM GMT)

மரத்தில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்:
விழுப்புரம் ஏ.பி.குப்பம் பகுதியை சேர்ந்த அசோக்கின் மகன் அன்பு(வயது 27). இவரும், அரியலூர் மாவட்டம் தளவாய் வடக்கு சிலுப்பனூர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த அரவிந்த்(24), திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி மாத பூண்டி நடுத்தெருவை சேர்ந்த நவீன்(25), கோவில்பட்டி லட்சுமிபுரம் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார்(28) ஆகியோரும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இந்நிலையில் ஒரு மினி லாரியில், சென்னையில் இருந்து இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு மேடை நிகழ்ச்சிக்காக சென்றனர். லாரியை அரவிந்த் ஓட்டினார். நேற்று முன்தினம் அதிகாலை பெரம்பலூர் புறநகர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தலை அடுத்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளி எதிரே அந்த லாரி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி அன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் உள்பட 3 பேரும் பலத்த அடைந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் அவர்கள் மீட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அரவிந்த், அருண்குமார் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அருண்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இந்நிலையில் அரவிந்த் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகே கடந்த 3-ந்தேதி லாரி- கார் மோதிய விபத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள் புளியமரத்தில் மினி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story