

பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வை நகராட்சியில் அமல்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகராட்சி தலைவருக்கு புதியதாக வாகனம் வாங்க அனுமதி பெறப்பட்டது. நகராட்சியில் நடைபெறும் சாலை பணிகள், குடிநீர் பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.3.90 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்களான தனமணி, லெட்சுமி, பழனிசாமி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.