நடராஜருக்கு சிறப்பு பூஜை


நடராஜருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 April 2022 6:43 PM GMT (Updated: 24 April 2022 6:43 PM GMT)

உடையார்பாளையம், தா.பழூரில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நறுமலர் பூங்குழல் நாயகி சமேத பயறனீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவோணத்தையொட்டி நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்று பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக பூஜையின்போது தேவாரம், திருவாசகம், பஞ்சபுராண பதிகங்களை பாடினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மஞ்சள், வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து திருமுறைகள், சிவபுராணம், நடராஜ பத்து முழங்க மங்கள ஆரத்தி நடைபெற்றது. சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

Next Story