விவசாய கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்


விவசாய கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 April 2022 7:51 PM GMT (Updated: 24 April 2022 7:51 PM GMT)

விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 

விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் கடன் அட்டை பெற  விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்

இது ெதாடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்ற சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற மே 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத திட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான பால் பண்ணை, கால்நடை பராமரித்தல் மற்றும் மீன் வளர்த்தல் ஆகியவற்றுக்கு கடன்அட்டை பெற விண்ணப்பிக்கலாம். 

ரூ.3 லட்சம் வரை கடன் உதவி

விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடன்களுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், மேலும் பால் பண்ணை, கால்நடை பராமரித்தல் மற்றும் மீன் வளர்த்தல் ஆகியவற்றிக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும்.
 இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். கடன் பெறும் விவசாயிகளிடம் 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்பசெலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம்.
விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும். இந்த திட்ட பயனாளிகள் மற்றும ்விவசாயிகள் கடன்பெற தங்களின் நிலஆவணங்கள் (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்), ஆதார்அட்டை குடும்ப அட்டை, வங்கி பாஸ்புக் நகல் போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பித்து பெறலாம். 
விண்ணப்பதாராரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வங்கிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிலம், பயிர் அளவீடு பொருத்து கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story