குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 April 2022 7:04 PM GMT (Updated: 25 April 2022 7:04 PM GMT)

வெள்ளியணை அருகே உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

வெள்ளியணை, 
9-ம் வகுப்பு மாணவன்
திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக் (14. இவன் திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
 இந்தநிலையில் கார்த்திக் தனது தாய்மாமா முருகேசன் என்பவருடன் சேர்ந்து கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள தாளியாபட்டிக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்தான். 
குளத்தில் மூழ்கினான்
நேற்று காலை தாளியாபட்டியிலுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து அங்குள்ள குளத்திற்கு கார்த்திக் குளிக்க சென்றுள்ளான். அப்போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவன் தண்ணீரில் மூழ்கினான். 
இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த சிறுவர்கள் அப்பகுதியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சோகம்
பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் குளத்தில் இருந்து கார்த்திக் உடலை பிணமாக மீட்டனர். இதையடுத்து கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story