திருக்கோவிலூர் அருகே பயங்கரம் சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை தம்பி உள்பட 4 பேர் கைது


திருக்கோவிலூர் அருகே பயங்கரம் சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 5:29 PM GMT (Updated: 29 April 2022 5:29 PM GMT)

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த அவரது தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


திருக்கோவிலூர்

சொத்து தகராறு

திருக்கோவிலூரை அடுத்த ஜம்படை கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் மகன் சக்கரவர்த்தி(வயது 47). தொழிலாளி. இவரது தம்பி சந்திரசேகர்(45). இவர்களுக்கிடையே நிலத்தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 28-ந் தேதி இருவருக்கும் பொதுவான நிலத்திலுள்ள மரத்தை சக்கரவர்த்தி வெட்டி இருக்கிறார். இது தொடர்பாக அன்று இரவு அண்ணன், தம்பிக்கிடையே தகராறு ஏற்பட்டது.  

அடித்து கொலை

இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், இவருடைய மனைவி இந்திரா, இவரது மகன் சஞ்சய், இவரது மனைவி ஜெயந்தி, உறவினர்கள் ஆட்டுக்காரன், இவரது மனைவி செல்லம்மாள் மற்றும் ரகுமதி ஆகிய 7 பேரும் ஒன்று சேர்ந்து உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் சக்கரவர்த்தியின் தலையில் பலமாக தாக்கினர். 
இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதைப்பார்த்து ஓடி வந்த குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சக்கரவர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

4 பேர் கைது

இது பற்றிய தகவலறிந்து திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்கு பிறகு சக்கரவர்த்தியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 
இந்த கொலை வழக்கு தொடர்பான புகாரின் பேரில் சக்கரவர்த்தியின் தம்பி சந்திரசேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரசேகர், சஞ்சய், ஆட்டுக்காரன், செல்லம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயந்தி, இந்திரா மற்றும் ரகுமதி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story