அருமனை அருகே ரேஷன் கடை முன்பு காங்கிரசார் போராட்டம்


அருமனை அருகே ரேஷன் கடை முன்பு காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 7:02 PM GMT (Updated: 29 April 2022 7:02 PM GMT)

அருமனை அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருமனை, 
அருமனை அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடை
அருமனை அருகே உள்ள சிதறால் துண்டத்தாறாவிளையில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் மாதத்தின் இறுதி நாளையொட்டி நேற்று ரேஷன் பொருட்கள் மற்றும் மண்எண்ணெய் வழங்கப்பட வேண்டும். ஆனால் ரேஷன் பொருட்கள் போதிய அளவு இருந்தும் கடை ஊழியர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. 
நேற்று பொருட்கள் வாங்க சென்றவர்களிடம் மண்எண்ணெய் போதிய அளவு இருப்பு இல்லை என்றும், மின்னணு தராசு பழுது காரணமாக அரிசி வழங்க முடியாது என்றும் கூறினார். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமம் அடைந்தனர். 
போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின் றைலஸ், பென்ராஜேஷ் ஆகியோர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, வெனிஸ் அஜின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடை முன்பு குவிந்தனர். அவர்கள் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் கடையில் இருக்கும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்க வலியுறுத்தினர். ஆனால் கடை ஊழியர் மறுத்தார். இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
பேச்சுவார்த்தை
உடனே, அதிகாரிகள் மற்றும் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் மண்எண்ணெய் மற்றும் ரேஷன் பொருட்களை முறையாக வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story