பஞ்சு ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்


பஞ்சு ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 30 April 2022 3:47 PM GMT (Updated: 30 April 2022 3:47 PM GMT)

பஞ்சு ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு சைமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர்
பஞ்சு ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு சைமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நூல் விலையேற்றம்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான சைமா தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி என ஜவுளித்துறையில் உள்ளவர்கள் அபரிமிதமான நூல் விலையேற்றத்தை சந்தித்து, தொழில் முடங்கி போகும் சூழ்நிலையில் இருந்ததை மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலமும், போராட்டங்கள் மூலமும் தெரிவித்தோம். உள்நாட்டு உற்பத்திக்கு பஞ்சு பற்றாக்குறை ஏற்பட்டபோது 11 சதவீதம் இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் இறுதி வரை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டதற்கு ஜவுளித்துறை சார்ந்த சங்கங்கள் சார்பில் மகிழ்ச்சியை, நன்றியை தெரிவித்தோம்.
 இதன்காரணமாக நூல் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என புரிந்தவுடன் மீண்டும் ஜவுளித்துறையினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இனிமேல் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு வரி இல்லை என்றபோதிலும், இனி கொள்முதல் செய்தாலும் பஞ்சு வரத்துக்கு 3 மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கான கண்டெய்னர்கள் தேவைக்கு கிடைப்பதில்லை.
பஞ்சு ஏற்றுமதிக்கு தடை
அரசின் சலுகை நோக்கத்தையும், ஜவுளித்துறையினரின் சிரமத்தையும் புரிந்து கொள்ளாத பெருமுதலாளிகள் தங்களிடம் உள்ள பஞ்சை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யவே முற்படுகிறார்கள். உள்நாட்டு விற்பனைக்கு அவர்கள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் லாபம் வைத்து விற்கின்றனர்.
எனவே பிரதமர் தலையிட்டு பஞ்சு ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். இதன் மூலமாக நூல் விலை குறைய வாய்ப்பு உள்ளதால் பின்னலாடை தொழிலை இக்கட்டான நிலையில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story