ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 April 2022 5:08 PM GMT (Updated: 30 April 2022 5:08 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

வேலூர்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவும் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன. 

27 வாரங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம், தொற்று பாதிப்பு குறைவு காரணமாக கடந்த மாதம் 2-ந் தேதிக்கு பின்னர் நடைபெறவில்லை. 

தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் வாரந்தோறும் சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்பேரில் தமிழகத்தில் 28-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதில், 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியை அதிகமான நபர்கள் போட்டு கொண்டனர். 

பொன்னை, மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

வேலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 21,956 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story