ஈரோட்டில் பயங்கரம்- சொத்து தகராறில் கட்டையால் அடித்து தந்தை கொலை; மகன் கைது


ஈரோட்டில் பயங்கரம்- சொத்து தகராறில் கட்டையால் அடித்து தந்தை கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 2 May 2022 9:40 PM GMT (Updated: 2 May 2022 9:40 PM GMT)

ஈரோட்டில் சொத்து தகராறில் கட்டையால் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் சொத்து தகராறில் கட்டையால் தந்தையை  அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஈரோடு திண்டல் வேப்பம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). விவசாயி. இவருடைய மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிக்குமார் (37) என்ற மகனும் உள்ளனர். இதில் பிரியதர்ஷினி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். என்ஜினீயரான ரவிக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது.
ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மீது ரவிக்குமார் கோபத்தில் இருந்து வந்தார்.
கட்டையால் அடித்து கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ரவிக்குமார் தனது தந்தை பழனிசாமியிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்கக்கோரி நிர்பந்தப்படுத்தி உள்ளார். ஆனால் பழனிசாமி மீண்டும் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனிசாமியை கொடூரமாக தாக்கி உள்ளார்.
இதில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரவிக்குமார் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தனது தாயை மிரட்டிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார். ருக்குமணி தனது கணவரை அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார். பின்னர் நள்ளிரவில் ருக்குமணி கணவரை எழுப்பி உள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. மகன் பலமாக தாக்கியதில் கணவர் பழனிச்சாமி இறந்தது தெரிய வந்தது.
மகன் கைது
இதைத்தொடர்ந்து நேற்று காலை இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் கொலை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் ஜெரி வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் பழனிச்சாமி வீட்டு முன்பு திரண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரவிக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ரவிக்குமார் தன்னுடைய தந்தையை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். 
சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story