வாலிபர் கழுத்தை அறுத்து கொலை


வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 4 May 2022 5:37 PM GMT (Updated: 4 May 2022 5:37 PM GMT)

வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

சிவகாசி, 
சிவகாசியில் மயானத்தில் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 
பட்டாசு தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கீழத்திருத்தங்கல் பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள தேவராஜ் காலனியை சேர்ந்தவர் டேவிட்ராஜா (வயது 38). இவருக்கும், கல்பனா என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுபா (10) என்ற மகள் உள்ளார். சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக டேவிட்ராஜா வேலை செய்து வந்தார். 
நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மயானத்தில் டேவிட்ராஜா பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கழுத்து அறுப்பு
அப்போது டேவிட்ராஜா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
அந்த பகுதியில் இருக்கும் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்விரோத தகராறில் அவரை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story