விவசாயி வீட்டில் ரூ.4½ லட்சம் நகை, பணம் திருட்டு

ஒலல்கெரே அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.4½ லட்சம் நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு: ஒலல்கெரே அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.4½ லட்சம் நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
விவசாயி
சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா சிக்கஜாஜூர் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். விவசாயியான இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் யாரோ மர்மநபர்கள், பசவராஜின் வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
ரூ.4½ லட்சம் மதிப்பிலான...
இந்த நிலையில் நேற்று காலை பசவராஜ், குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.4.40 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். அப்போது தான் பசவராஜிக்கு, மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து பசவராஜ், சிக்கஜாஜூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடிநின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து சிக்கஜாஜூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story