மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு ஏரி, குளங்களை அரசு தூர்வார வேண்டும்


மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு ஏரி, குளங்களை அரசு தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 6 May 2022 1:53 PM GMT (Updated: 6 May 2022 1:53 PM GMT)

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்புக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருச்சி மே 7-
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்புக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர் கூட்டம்
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்   கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினார்கள். விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன்:- உய்யக்கொண்டான், பெருவளை, அய்யன் வாய்க்கால், ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால், பங்குனி வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்களை ஜூன் 5-ம் தேதிக்குள் தூர்வாரி வண்டல் மண் எடுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். புலிவலம் ஏரி, கீரம்பூர் ஏரி ஆகியவற்றில் உள்ள வேலி கருவ முள் செடிகளை அகற்ற வேண்டும். நந்தி ஆற்றை தூர்வாரி அங்கு மணல் அள்ளுவதை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கான மானியம் மறுக்கப்படுகிறது.
மின் தட்டுப்பாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன்:-
உய்யகொண்டான் தலைப்பு பகுதியான பெட்டவாய்த்தலை முதல் கோப்பு ஆற்று பாலம் வரை உய்யகொண்டான் இடது கரையில் படர்ந்து கிடக்கும் முள் செடிகொடிகளை அகற்ற வேண்டும். தலைப்பு முதல் புலிவலம் மணற்போக்கி வரை இடது கரையை தார் சாலையாக மாற்ற வேண்டும்..
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம்:- தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வரும் சூழ்நிலையில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வார வேண்டும்
தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர் சின்னதுரை;-
தற்போது கோடை காலம் என்பதால், மேட்டூர் அணை திறப்புக்கு முன்பு ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், பாசன வடிகால் வாய்க்கால்கள், மழைநீர் வரத்து வாரிகள் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி வருங்காலத்தில் கடைமடை பகுதிவரை தண்ணீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் சென்ற ஆண்டைப் போன்று ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
பாரதீய கிசா சங்க மாநில செயலாளர் வீரசேகரன்:-
திருச்சி மாவட்டவிவசாயிகளுக்கு அறிவுசார் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உரமானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மின் இணைப்பில் திருச்சி மாவட்ட இலக்கு முழுமை பெறவில்லை. தற்போது 50 ஆயிரம் மின் இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஏற்கனவே, காத்திருப்பவர்களின் நிலை என்ன என்று விளக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
மேலும் விவசாயிகல் முருகவேல், துரைராசு உள்ளிட்ட பலர் பேசினர்.

Related Tags :
Next Story