புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக வீட்டிற்கு வந்த போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரி கைது


புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக வீட்டிற்கு வந்த போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரி கைது
x
தினத்தந்தி 8 May 2022 6:16 AM GMT (Updated: 8 May 2022 6:16 AM GMT)

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக வீட்டிற்கு வந்த போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,  

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் 10 மாத கைக்குழந்தையுடன் கடந்த 2 மாதங்களாக வாடகைக்கு தனியாக குடியிருந்து வருகிறார்.

இந்தநிலையில், அவர் புதிய ரேஷன் கார்டு வாங்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த அயாத் பாஷா (வயது 45) என்பவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து ஆவண சோதனைக்காக வந்துள்ளார். அப்போது தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பின்னர் ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி நாளை வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் மீண்டும் இரவு அப்பெண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்த அயாத்பாஷா, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பெண் சுதாரித்துக்கொண்டு கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் உடனடியாக வந்து அரசு அதிகாரியை மடக்கி பிடித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story