திருப்பூரில் சரக்கு வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்


திருப்பூரில் சரக்கு வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
x
தினத்தந்தி 8 May 2022 3:33 PM GMT (Updated: 8 May 2022 3:33 PM GMT)

திருப்பூரில் சரக்கு வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

அனுப்பர்பாளையம்
திருப்பூரில் சரக்கு வேன் மோதிய விபத்தில் கணவர்-குழந்தை கண் எதிரே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கூறப்படுவதாவது:-
வேன் ேமாதியது
கோவை மாவட்டம் பீளமேடு துரைசாமி நகரை சேர்ந்தவர் சுசீந்திரன். இவருடைய மனைவி சிவகாமி (வயது 27). இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. திருப்பூரில் உள்ள காதர்பேட்டைக்கு வந்து துணி எடுக்க வேண்டும் என்று கணவன்-மனைவி முடிவு செய்தனர். இதற்காக சுசீந்திரன் நேற்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் அவினாசி ரோடு வழியாக திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகே வந்தபோது சரக்கு வேன் ஒன்று சுசீந்திரன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை வலதுபுறமாக முந்தி சென்றது. 
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதியதில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் வலதுபுறமாக விழுந்த சிவகாமி மீது சரக்கு வேன் ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். 
பெண் பலி
பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிவகாமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விபத்தில் படுகாயமடைந்த சிவகாமியை சுசீந்திரன் நடுரோட்டில் மடியில் படுக்க வைத்தபடி கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தார்.  
 பொதுமக்கள் ஆம்புலன்சுகளுக்கு தகவல் தெரிவித்தும் வராததால் சிவகாமி நீண்ட நேரமாக நடுரோட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்கு பின்னரே தனியார் ஆம்புலன்சு வந்து சிவகாமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பொதுமக்கள் வாக்குவாதம்
 இந்த நிலையில் சரக்கு வேன் டிரைவர் செல்போனில் பேசியபடி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் சிலர் வேன் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை தாக்க முயன்றனர்.
 அங்கு வந்த போலீசார் பொதுமக்களை சமரசப்படுத்தி அனுப்பினார்கள். திருப்பூரில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் கணவர், குழந்தை கண்ணெதிரே பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

---

Related Tags :
Next Story