பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-மயக்கம்: நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-மயக்கம்: நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 May 2022 6:19 PM GMT (Updated: 9 May 2022 6:19 PM GMT)

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி:
வாந்தி-மயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள பிரியாணி கடையில் வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டு 46 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
இதில் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கனிமொழியும், தஞ்சாவூர் மருத்துவமனையில் ராஜேஷ் (வயது 6) என்ற சிறுவனும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 10-ம் வகுப்பு மாணவன் ராமநாதன் உள்பட 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சாலை மறியல் 
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் உறவினர்கள் இன்று அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். பின்னர் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு எதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து விவரம் சம்பந்தபட்ட உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள எங்களது உறவினர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு 
இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், உணவுத்துறை அதிகாரி ஜேம்ஸ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாந்தி-மயக்கம் ஏற்பட்டத்திற்கான காரணம் மருத்துவ சான்றிதழ் வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story