கட்டுமான பொருட்கள் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை


கட்டுமான பொருட்கள் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 May 2022 8:23 PM GMT (Updated: 9 May 2022 8:23 PM GMT)

கட்டுமான பொருட்கள் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(வயது 45). இவர் அரசு கல்லூரி அருகே திருச்சி ரோட்டில் வீட்டு கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் டிரேடர்ஸ் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நள்ளிரவு 12 மணியளவில் இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் சட்டை அணியாமல் பனியன் மட்டும் அணிந்து இருந்தார். இவர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த சிறிய கட்டுமான பொருட்களையும், கல்லாப்பெட்டியில் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 4,500 ரூபாய் ரொக்கப்பணத்தையும் திருடினார். பின்னர் பணம் வைக்கப்பட்டிருந்த அந்த கைப்பையை தலையில் மாட்டிக்கொண்டு மேஜையில் இருந்த நீண்ட கைத்தடியை கையில் பிடித்துக்கொண்டு ராஜாவாக தன்னை பாவித்து ராஜநடை போட்டு முன்பக்க கதவை அப்படியே திறந்து வைத்துவிட்டு சர்வ சாதாரணமாக தப்பி சென்றுவிட்டார். இவை அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற திருடனை தேடி வருகின்றனர்.

Next Story